சென்னை: ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சண்முகம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. மேலும் அனுமதி இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்து தனி நபர்கள் தாக்கல் செய்யும் புகார்களை, பொது நல வழக்காக கருத முடியாது என கருத்து தெரிவித்தனர்.
இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும். அந்த புகார்களை அதிகாரிகள் சட்ட ரீதியாக பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மட்டுமே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் , அதுவும் பொது நல வழக்காக தொடர முடியாது என கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.