சென்னை: சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து பரப்புரையைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை , வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.