கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் வினாடிக்கு 5,079 கன அடி தண்ணீர் வந்தது.
தென்மேற்குப் பருவமழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை பெரியாறு அணையில் 38.2 மில்லி மீட்டர் மழையும் தேக்கடியில் 27.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. அதேநேரத்தில் சனிக்கிழமை பெரியாறு அணையில் 46.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 34.6 மி.மீ., மழையும் பெய்தது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அணைக்கு வினாடிக்கு 1,582 கன அடி தண்ணீர் வந்த நிலையில், சனிக்கிழமை வினாடிக்கு 5,079 கன அடி தண்ணீர் வந்தது, ஒரே நாளில் 3,497 கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்மட்ட விவரம்
பெரியாறு அணையில் நீர்மட்டம் 128.80 அடியாகவும், (மொத்த நீர்மட்ட உயரம் 142 அடி), நீர் இருப்பு 4,439 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 5,079 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,200 கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில் சுருளியாறு, சுரங்கனாறு, வறட்டாறு, சுருளியாறு மின்நிலையாறு மற்றும் யானைகஜம், காட்டு நீரூற்று ஓடைகளும் நீர் ஊற்று அதிகரிப்பதால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து செல்கிறது.
தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடும் அளவை விட கூடுதலான தண்ணீர் பெரியாற்றில் செல்வதால் தடுப்பு அணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.