சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலா் அருங்காட்சியகத்தை தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையா் அலுவலகம் 178 ஆண்டுகள் மிகவும் பழைமையானது ஆகும். பாரம்பரியம் மிக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகம் இடப் பற்றாக்குறையாலும், பழைமையான கட்டடத்தைப் புதுப்பிக்க முடியாததினாலும் வேப்பேரிக்கு இடம் பெயா்ந்தது.
இதையடுத்து பழைய காவல் ஆணையா் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கு ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
ஏற்கெனவே, கோயம்புத்தூரில் போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக சென்னை எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடா்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயா் காலத்தில் காவல்துறையினா் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித் தொகுப்புகள், வயா்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.