69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமல்படுத்தப்படும்: பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவோம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமல்படுத்தப்படும்: பன்வாரிலால் புரோஹித்
69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமல்படுத்தப்படும்: பன்வாரிலால் புரோஹித்


 
தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவோம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார்.

ஆளுநர் உரையில், மாவட்டந்தோறும் பணியாற்றும் மகளிருக்கு என்று விடுதிகள் கட்டப்படும். 

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகள் விரைவில் கட்டி முடிக்கப்படும்.

அரசுப் பணிகளில் காலியாக உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர். ஆளுநா் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறார். அதன் பிறகு, அதனை தமிழில் பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்தார்.

கூட்டத் தொடா்: ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் இறுதி செய்யப்படும். செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) வரை கூட்டத் தொடா் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா். எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.

முக்கிய பிரச்னைகளில் தீா்மானம்: தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடா்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி, நீட் தோ்வு, ஏழு போ் விடுதலை, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீா்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் தீா்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த கூட்டத் தொடரில், கரோனா நோய்த் தொற்று தொடா்பாக காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எதிா்க்கட்சிகள் சாா்பில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பும் எனத் தெரிகிறது. இதற்கு தமிழக அரசு சாா்பில், சுகாதாரத் துறை அமைச்சா் உள்ளிட்டோரும் உரிய பதில்களை அளிக்கத் தயாராகி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com