திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 பொதுத் தொகுதிகளும், 3 தனித் தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஏற்கெனவே ஒப்பநதம் போடப்பட்டது. 6 தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து இரண்டு, மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:
திருப்பரங்குன்றம்
கந்தர்வக்கோட்டை (தனி)
திண்டுக்கல்
கோவில்பட்டி
அரூர் (தனி)
கீழ்வேளூர் (தனி)
நாங்கள் கேட்ட ஒன்றிரண்டு தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒரே தொகுதியை 3, 4 கட்சிகள் கேட்பது இயல்பானது. அப்படிப்பட்ட சூழலில் யாரேனும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். அதனால், உடன்பாடு ஏற்பட சற்று தாமதம் ஆனது.
மாலையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. கையெழுத்து மட்டும் தற்போது போட்டுள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி சென்னையில் அறிவிக்கப்படுகிறது" என்றார்.