தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலை, திமுகவுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கிறது. அக்கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதில், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.
30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வலியுறுத்துவோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துவோம். பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.