கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வங்கியில் கடன் பெற்றவர் இறப்புக்கு காரணமான மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் 6 ஆவது வார்டைச் சேர்ந்தவர் மனோகரன் (51). இவர் கடந்த 2013 ல் க.புதுப்பட்டியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கினார். 2015 வரை தவணையை முறையாக செலுத்தினார்.
அதன் பின்னர் 2016 ல் முல்லைப்பெரியாறு பிரச்சனை காரணமாக தமிழக கேரள மாநிலங்களிடையே தொழில் குறைவு காரணமாக வங்கியில் கடன் தவணைகளை செலுத்தமுடியவில்லை.
இதற்கிடையே ரத்தக்கொதிப்பு மற்றும் கண்பார்வை குறைவினால் மனோகரன் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 19.11.2019 ல் வங்கி அலுவலக மேலாளர் அந்தோணி மற்றும் இரண்டு பேர் மனோகரன் வீட்டுக்கு வந்து பணம் கட்டுமாறு கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டி சென்றுள்ளார்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகமான மனோகரன் உயிரிழந்தார்.
இதுபற்றி இறந்த மனோகரன் மனைவி திரவியம் தனது கணவர் இறப்பு காரணமான வங்கி அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலைமணி செவ்வாய்க்கிழமை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்.