கடலூர்: சென்னை மற்றும் தருமபுரியில் தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்களில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் அறிவிக்கப்பட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், சென்னை மற்றும் தருமபுரியில் உள்ள அமைச்சரின் ஆதரவாளர்களின் நிறுவனங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனையில் அமைச்சரின் சம்மந்தி இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குமாரசாமிபேட்டையில் உள்ள கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் எவ்வளவு பணம், ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஆனால், சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.