தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் உரையாடினார். கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்.
இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.