மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைக்கான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மற்றும் மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கினர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் கரோனா சிகிச்சைக்காக முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை போதிய அளவு கையிருப்பு வைத்திருக்கவும் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து முத்தனேந்தல் ஊராட்சியை பணி செய்யும் தூய்மை பணியாளர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட திமுக துணை செயலாளர் சேங்கைமாறன், சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.