பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு நூதன தண்டனை விதித்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மே 24 -ம் தேதி முதல் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் வியாழக்கிழமையன்று புறவழிச்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சருத்துப்பட்டி அருகே புறவழிச்சாலையின் அருகே பெரியகுளம் அருகே வடகரையை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்து அறிவுரை வழங்கிய காவல்துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் அரசின் அறிவுரைகளை பின்பற்றுவேன். இனிமேல் விதிமுறைகளை மீறி பொதுமுடக்கத்தில் கிரிக்கெட் விளையாட மாட்டோன். இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் எனக் கூறி உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.