பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்தாண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கடந்த முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதையடுத்து, பதக்கம் வென்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் திரும்பிய மாரியப்பன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வரிடம் அரசுப் பணி வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காகித நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேலாளர் பதவிக்கான பணி ஆணையை மாரியப்பன் தங்கவேலுவிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.