முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றும் வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்தது.
இதில், ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 'ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும்' என்று கூறியதுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபணை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். ஆறுமுகசாமி ஆணையத்தை முடக்குவதை ஏற்கமுடியாது .மாறாக, இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க அரசு தயாராக உள்ளது' என்று தமிழக அரசு பதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.