கிருஷ்ணகிரி: அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து, கட்சித் தொண்டன் யாரும் சிந்திக்கவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: வடகிழக்கு பருவ மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் ராகியும், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த தொடர் மழையால் ராகி, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு டெல்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு போல கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கும் அதே தொகையை வழங்க வேண்டும்.
இதையும் படிக்க | சிறைக் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்க வழிகாட்டி நெறிமுறைகள்
அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா எவ்வாறு வழிநடத்தி சென்றார்களோ அதுபோல கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிநடத்திச் செல்வார்கள்.
அம்மா உணவகம் போல கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான திட்டத்தை தான் செயல்படுத்துகிறார்கள்.
அன்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கருத்துக்களை சொல்ல முழு உரிமை உள்ளது.
தமிழகத்தில் தொடர் மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது அதிமுக அரசு விரைந்து செயல்பட்டது. தற்போதைய தமிழக அரசு அவ்வாறு செயல்பட வில்லை. அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. வெள்ளத்தை சமாளிக்க தற்போதைய தமிழக அரசுக்கு திறன் இல்லை.
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ், தமிழக அரசின் நடவடிக்கையை ஆதரித்து தான் ஆகவேண்டும்.
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து எந்த தலைவனும் தொண்டனும் சிந்திக்கவே இல்லை. ஊடகங்கள்தான் பேசிக் கொண்டிருக்கின்றன.
வேதா இல்லம் தொடர்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவை மதிக்கும் நோக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அப்போது அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ., பி.எம். தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.