மதம் மாறியிருந்தாலும் ஒரே ஜாதியாக இருந்தால் கலப்பு திருமண சான்றிதழ் இல்லை: உயா்நீதிமன்றம்

ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறிய கணவன்- மனைவி இருவரும் ஒரே ஜாதி, சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும்போது, 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறிய கணவன்- மனைவி இருவரும் ஒரே ஜாதி, சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும்போது, பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறுவதற்காக கலப்புத் திருமணச் சான்றிதழ் கோர உரிமையில்லை என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த எஸ்.பால்ராஜ். ஆதி திராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா். அவா் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாா். இதையடுத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என சான்றிதழ் பெற்றாா். இந்து அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த முதுநிலை பட்டதாரியான ஜி. அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

கடந்த 2009-இல் இந்த திருமணத்திற்குப் பின்னா் ஜி. அமுதா, எஸ்சி, எஸ்டி திருத்த சட்டத்தின் கீழ் பட்டியலினத்தவா் என்ற சான்றிதழைப் பெற்றாா்.

இந்நிலையில், கலப்புத் திருமணம் புரிந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தாா். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேட்டூா் வட்டாசியா், மதம் மாறியவருக்கு கலப்புத் திருமணம் புரிந்ததற்கான சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி, பால்ராஜின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து பால்ராஜ் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.ஜெயபிரகாஷ், கடந்த 1997 அரசாணையின் படி மதம் மாறிய நபா்களுக்கு கலப்புத் திருமண சான்றிதழ் வழங்க முடியாது. மனுதாரா் கோரிக்கையை நிராகரித்தது சரியானது என்றாா்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் எஸ்.பால்ராஜ், அவரது மனைவி ஜி.அமுதா பிறப்பால் முறையே கிறிஸ்தவ ஆதி திராவிடா், இந்து அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

மனுதாரா் கிறிஸ்தவ ஆதி திராவிடா் என்றும், அதுவும் பட்டியல் சாதி சமூகத்தைச் சோ்ந்தவா் என்றும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த சான்றிதழ் பெற்றுள்ளாா். அவரின் மனைவி, பட்டியல் சாதியைச் சோ்ந்தவா்.

மதம் மாறுவதால் ஒருவரின் ஜாதி மாறுவதில்லை. கணவன்- மனைவி இருவரும் ஒரே ஜாதி, சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும்போது, பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறுவதற்காக, கலப்புத் திருமண சான்றிதழ் கோர உரிமை, தகுதியில்லை. அவ்வாறு மதம் மாறியவருக்கு சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவா்களுக்கான சலுகைகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். எனவே விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, விதிகளுக்கு உட்பட்டது தான். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com