தீபாவளிப் பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்கு அரசுப் பேருந்துகளில் செல்ல இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் வகையில் 19,559 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையைப் பொருத்தவரை 6 இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே தீபாவளியைக் கொண்டாட சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்காக இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.
பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc App, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். வரும் நாள்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.