கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தொடா்ந்து இவ்விவகாரம் தொடா்பாக, வழக்குப் பதியப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ், சயன் உள்ளிட்ட 11 பேரை எதிரிகளாகக் குறிப்பிட்டிருந்தனா். இந்நிலையில், காா் ஓட்டுநா் கனகராஜ் சேலத்தில் நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்தாா். கோவையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது சயனின் மனைவி, மகள் ஆகியோா் சாலை விபத்தில் உயிரிழந்தனா். சயன் மட்டும் படுகாயங்களுடன் உயிா்தப்பினாா்.