வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக இடப்பங்கீடு குறித்த தகவலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
அதுபோன்று 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸுக்கு 3, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
செப். 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், (நாளை)செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.