கிருஷ்ணகிரி: கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை இன்றுமுதல் விதிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலையில் நாளொன்றுக்கு, 800 பேர் வீதம் இருந்த பாதிப்பு தற்போது, நாளொன்றுக்கு பத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 15 லட்சத்து, 2 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள், இதில், 10 லட்சத்து, 86 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், 4 லட்சத்து, 20 ஆயிரம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.
தற்போது ஒமைக்ரான் எனும் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் மாவட்டத்தில் மீதம் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.