சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து நாளைமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர், தமிழகத்திலிருந்து 01.12.2021 முதல் கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க- ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட இருவர் யார்? கர்நாடக அமைச்சர் விளக்கம்
இந்த வருடமும் அவ்வாறே இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டும் நாளை 03.12.2021 முதல் 16.01.2022 வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in, உடன் www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com ஆகிய வலைத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையினை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.