சென்னை, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தந்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.
இந்த சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகளான கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டது குறித்து ஆளுநரிடம் பேசியதாக பாஜக தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- நெஞ்சில் ரஜினி படத்துடன் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின் பாஜக மாநில பொதுச்செயலர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை.
பாஜகவின் நிர்வாகிகள் மீது திமுக வழக்குப்பதிவு செய்துள்ளது. திட்டமிட்டே திமுக அரசு இந்த வழக்கினை பதிவு செய்து வருகிறது என்றார். இதற்கிடையே கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தமிழக அரசு போடும் வழக்குகளை எதிர்த்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவர் கே.நிர்மல் குமார் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.