தஞ்சாவூர்: மத்திய அரசின் நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ் பயனடைய இளைஞர்களுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ் பயனடைய தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியிலுள்ள புதுமைப் படைப்பில் ஆர்வமுள்ளவர்கள் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழத்தை அணுகலாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் மையமாக சாஸ்த்ரா விளங்குகிறது.
சிறந்த யோசனை, ஏதோ ஒரு தயாரிப்பின் முன் வடிவம் இருந்து, அதற்கான நிதியுதவி தேவைப்பட்டால் சாஸ்த்ராவை அணுகலாம்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினரால் உருவாக்கப்பட்ட நிதி பிரயாஸ் திட்டம் புதுமை படைப்பில் திறன் உள்ளவர்களை ஊக்குவித்து அவர்களது தொழில்நுட்பம் சார்ந்த யோசனைகளைக் கொண்டு தொடக்க நிலை நிறுவனங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆர்வமுள்ள இளைஞர்களின் யோசனைகளைத் தயாரிப்பு முன் வடிவமாக மாற்ற நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதில் தெரிவு செய்யப்படுவோர் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். மேலும், சாஸ்த்ரா டி.பி.ஐ.-இன் உள்ள 3டி பிரிண்டிங், எல்.ஓ.டி., வி.ஆர்., டிரோன் ஆகிய வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் சாஸ்த்ராவின் தொழில்முனைவோருக்கான வளர்ப்பக மையத்தின் நவீன கணினி வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். உற்பத்தி, விவசாயம், சுகாதாரம், ஏஐ-எம்எல், ஆற்றல், நீர், எல்ஓடி ஆகிய துறைகளில் புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டம் குறித்து கூடுதல் தகவல் பெற மற்றும் விண்ணப்பம் தொடர்பாக prayas.sastratbi.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விண்ணபிக்க கடைசி நாள் டிசம்பர் 20 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையுடம் படிக்க | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?