கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை இன்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 28 நபர்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அறிகுறி இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளவும் கட்டாயம் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளளேன்.
தமிழத்தில் உள்ள 11 லட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் மற்றும் 9 லட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசி குறித்த குறுஞ்செய்தி திட்டம் மூலம் பயனடைவார்கள் என்றார். இதுபோல முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை பெறுவதற்கும் இந்த குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழகத்திற்கு அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வந்த 12,767 பேருக்கும், மற்ற வெளிநாட்டில் இருந்து வந்த 2,101 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 14,868 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 70 பேருக்கு கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு கரோனா மறுஆய்வில் நெகட்டிவ் வந்துள்ளதை அடுத்து 65 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேருக்கு ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியபட்டு ஒமைக்ரான் வகை கரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியப்பட்ட அனைவரது மாதிரிகளும் மரபியல்
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் 10 பேரின் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 8 பேருக்கு டெல்டா, ஒருவருக்கு ஒமைக்ரான், ஒருவருக்கு என்ன தொற்று என்று உறுதிசெய்யப்படவில்லை. அவருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும்.