குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவது பற்றிய முதல்வரின் அறிவிப்பில், மத்திய அரசு, 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், குடியுரிமை திருத்த மசோதா – 2019 ஐ கடந்த 04.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
இதனையடுத்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு, உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்கலாமே.. கரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் அறிவிப்பு
இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர். இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.