வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 6495 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு வசதி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.