
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி. இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.
இதையும் படிக்க | மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தற்கொலை
இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவன் தனுஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்த மாணவரின் உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளரும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் திமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தார். உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து அவருடன் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினருக்கு மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.