வங்கக் கடலில் குலாப் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
குலாப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 பேரிடர் குழுக்கள் முன்னெச்சரிக்கை பணிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்
ஒடிசா மாநிலத்தில் 13 குழுக்களும், ஆந்திரத்தில் 5 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 75-85 கி.மீ-ல் இருந்து 95 கி.மீ வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.