
புதுச்சேரி: புதுச்சேரியில் விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, திமுக சார்பில் சட்டப்பேரவை நோக்கி கண்டன பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாநில திமுக சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மின் கட்டண உயர்வுக்கு காரணமான என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்தபடும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.
அதன்படி, எதிர்தக்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமரன் மற்றும் நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை புதுச்சேரி அண்ணாசிலை அருகே திரண்டனர்.
அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டிகளுடன் சட்டப்பேரவை நோக்கி புறப்பட்ட பேரணியானது, அண்ணாசாலை, நேருவீதி, காந்திவீதி, மிஷின்வீதி வழியாக சட்டபேரவை நோக்கி சென்றது.
சட்டப்பேரவை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுகவினர் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திமுகவின் பேரணியையொட்டி சட்டப்பேரவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.