கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு முடிந்து திரும்பும்போது கூட்டநெரிசலில் ஏற்பட்டது.
இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சேர்ந்த செல்வம் மற்றும் ஜெயலட்சுமி(62) இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதையும் படிக்க | கள்ளழகர் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி; 15 பேர் காயம்
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த திண்டுக்கல் - முனியம்மாள், மூணாறு - பழனி, மதுரை மாவட்டம் செக்கானூரணி - மாரியம்மாள், விரிசல்குளம் - சத்யா, சம்மட்டிபுரம் - ஜெயலட்சுமி, அம்மாபட்டி - மணிமேகலை, ஆவியூர் - வள்ளி, வில்லூர்- பஞ்சவர்ணம், செல்லூர் - மகேஸ்வரி மற்றும் முத்து கிருஷ்ணவேணி, திருமங்கலம் சுதந்திர மணி ஆகிய 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவராணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல பலத்த காயமடைந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் செலவை அரசே ஏற்கும் என்றார்.
இதையும் படிக்க | வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!