/

வைகையாற்றில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

News image

மதுரை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

Updated On :16 ஏப்ரல் 2022, 11:33 am IST

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் பகுதியில் திரண்டனர். இதில் ஏவி பாலத்தின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டு அதில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர். மேலும், மேலும் 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, உயிரிழந்த இருவருக்கும் தலா ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும்  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் காயமடைந்த அனைவரும் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  கரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.  மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.