
சென்னை, போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.35லட்சம் இழந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர், விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரபு(39). இவரது மனைவி ஜனனி என்ற இந்து(36). பிரபு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கரோனா காலத்தில் அந்த கம்பெனியில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் சிலரை நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் பிரபு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிகிழமை இரவு மனைவி ஜனனி வீட்டில் இல்லாத போது பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து போரூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க- இன்றும் ஒரு மின்சார ஸ்கூட்டர் எரிந்தது
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிரபு கிரெடிட் கார்டு மூலமாக வங்கியில் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் ரூ.15 லட்சமும், வீட்டு கடன் அடைக்க அவரது தந்தை கொடுத்த ரூ.20 லட்சம் என ரூ.35 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனை அடைக்க வங்கியிலிருந்தும் அழுத்தம் கொடுத்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பிரபு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீஸார் வேறு எதுவும் காரணம் உள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.