சேலம் ஆத்தூர் அருகே விவசாயி வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன். இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 7 ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதனையடுத்து லோகநாதன் தலைவாசல் போலீசில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 ரூபாய் பணம் மற்றும் கால் பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாக முதலில் கூறியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில், தனது நண்பர் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பைகளில் இரண்டு கோடி ருபாய் பணத்தை கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கும்படி கூறியதாகவும் அதில் ஒரு கோடியை பீரோவிலும் இன்னொரு கோடியை நெல் மூட்டைகளுக்கு இடையே வைத்ததாகவும் அதில் பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மட்டும் கொள்ளை போனதாகதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தடையறிவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து, பின்னர் அவரது நண்பரையும் வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
அப்போது இருவரும் முறையாக பதில் அளிக்காததால், டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொள்ளை தொடர்பாக லோகநாதன் இதுவரை போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்பதால் அவரிடமும் விசாரணை தொடர்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.