தமிழக அரசின் இலவசப் பேருந்தில் பயணித்த மூதாட்டியை நடத்துநர் தரக்குறைவாகப் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34ஏ என்ற அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார்.
அப்போது நடத்துனர் மூதாட்டியிடம், 'காசு ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா?' என்று கேட்கிறார். அதற்கு மூதாட்டி, 'காசு ஓசின்னு நான் போகல, ஏன் தம்பி இப்டி பேசுறீங்க? கோவமா பேசுறீங்க?' என்று கேட்கிறார்.
சகப் பயணி ஒருவர் செல்போனில் இதனை விடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்,. தற்போது இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த காட்சிகள் வெளியானதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையைச் சேர்ந்த நடத்துநர் ரமேஷ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.