
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதலாக, இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் 150-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று (டிச. 19) பேரணி நடத்தப்படும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியும் திட்டமிட்டபடி இன்று பேரணி நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் 13 கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.