சீனாவிலிருந்து மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது.
தில்லி விமான நிலையத்தில் கடந்த வாரம் 4 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த விமானத்தில் மொத்தம் 72 பயணிகள் பயணித்தனர். அவர்களில் 15 பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில், இருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
விசாரணையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்த விருதுநகரை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவரது 5 வயது பெண் குழந்தை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவருடன் பயணித்த 15 வயதுடைய மற்றொரு மகளுக்கு கரோனா இல்லை.
உருமாற்றமடைந்த புதிய வகை கரோனாவால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபனு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டு வீடுகளில் 15 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பாங்காக்கிலிருந்து வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு, அவரின் மாதிரிகளும் மரபனு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களுடன் மொத்தம் 10 பேருக்கு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.