பிற்பகல் பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து புறப்பாடானது. இவரைத் தொடர்ந்து திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், ஸ்ரீ ரெகுநாத பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், நிரவியில் உள்ள ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் ஆகியவை பட்டினச்சேரி கிராமம் வழியே கடற்கரைக்கு திரளான பக்தர்கள் சூழ சென்றன. மீனவ கிராம முக்கிய பிரமுகர்கள், கிராம எல்லையில் சுவாமிகள் நுழைந்ததும், சம்பிரதாய முறைப்படி சுவாமிகளை வரவேற்றனர்.