மக்களைத் தேடி மருத்துவம்: இதுவரை 50 லட்சம் பேர் பயன்

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 50 லட்சம் பேர் பயனடைந்துள்ள நிலையில், 50 லட்சமாவது பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளியிடம் உடல்நலம் குறித்து கேட்டறியும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளியிடம் உடல்நலம் குறித்து கேட்டறியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 50 லட்சம் பேர் பயனடைந்துள்ள நி`லையில், 50 லட்சமாவது பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று மருந்து பெட்டகங்களை வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொற்றாநோய்களான சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரவிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

"முதற்கட்டமாக இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடும் 20 லட்சம் பேரின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கவிருக்கிறோம். இது தவிர, கிராமம், நகரம் எனத் தமிழகம் முழுவதும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, வீடு தேடிச்சென்று கண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட விருப்பப்படுகிற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். இதற்கு, 6 மாத காலம் இலக்கு வைத்திருக்கிறோம்" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்போது தெரிவித்திருந்தார். 

இந்த திட்டத்தை ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி, சேலம், ‌‌‌மதுரை, திருநெல்வேலி உள்பட ஏழு மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 50 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 50 லட்சமாவது பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று மருந்து பெட்டகங்களை வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோன்று, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் செயல்பட்டுத்தப்படும் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 21 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக, ரூ.19 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என 640 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். 

மேலும், உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 188 புதிய ஆம்புலன்ஸ் வேன்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய ஆம்புலன்ஸ் வேன்களின் எண்ணிக்கை 1491 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com