கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்குத் தடை
தஞ்சாவூர்: கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து வந்ததால், கோயில்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூர் பெரியகோயில் வெள்ளிக்கிழமை காலை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் முகப்பில் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். என்றாலும் கோயிலுக்குள் வழக்கம்போல பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன.