வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு பேருராட்சி பகுதியில் போகிப் பண்டிகையையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து விற்றதில் கிடைத்த வருமானம் தூய்மைப் பணியாளர்களின் பொங்கல் கொண்டாட்டத்துக்கு உதவியாக மாற்றப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் பழையன கழிதல் என பொதுமக்கள் மார்கழி மாதத்தில் வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிய பொருள்களை தீயிட்டு எரித்துவிடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடு வீடாக பழைய பொருள்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்த பொருள்களை விற்பனை செய்து கிடைத்த வருமானத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் கொண்டாட கரும்பு, வாழை, புதுப்பானை, இஞ்சி, மஞ்சள் கொத்துகள் வாங்கி இன்று வியாழக்கிழமை (ஜன.13) அளிக்கப்பட்டன.
திடக் கழிவு மேலாண்மையில் குப்பை என்பது தவறவிடப்பட்ட வளம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக பேரூர் செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மெட்ரோ ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?