எடப்பாடி: தை அமாவாசை திதியையொட்டி எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் இன்று அதிகாலை முதலே திரளான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அருகில் உள்ள ஆறுகள், கடற்கரைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி , தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு சிறப்பு பித்ரு பூஜை செய்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பக்தர்கள் இதுபோன்ற சம்பரதாய நிகழ்வுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை
அண்மையில் தமிழக அரசு கரோனா கட்டுப்பாடுகளுக்கு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரிக்கரை பகுதியில் உள்ள படித்துறை, படகுத்துறை, கைலாசநாதர் கோயில், நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் ஆலயம், படித்துறை விநாயகர் சன்னதி உள்ளிட்ட காவிரி கரை பகுதிகளில் திரளான மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் மற்றும் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் மக்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.