அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட முடியும்?
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட முடியும் என்பது குறித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை நீக்கப்பட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரசியல் அனாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்
அதாவது:
* பொதுச்செயலாளர் அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
* பொதுச்செயலாளர் தேர்தலில் பங்கேற்க 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
* தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
* பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!
* மாவட்டச் செயலாளர்கள் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்.
* மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும்.
* துணைப் பொதுச் செயலாளரை பொதுச்செயலாளர் மட்டுமே நியமனம் செய்ய முடியும்.