அஇஅதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ இ அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 'நன்றி அப்பா’: கருணாநிதியை நினைவுகூர்ந்த குஷ்பூ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்களில் ஒருவனாக கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி 48 ஆண்டுகளாக பணியாற்றிவரும் என்னை இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதோடு நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், “பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நம் இருபெரும் தலைவர்கள் அமைத்துத் தந்த பாதையில் இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்பேன். இதுவே எனது லட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.