சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்
சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்

சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்

எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற சர்ச்சைக்குரிய கேள்வியால் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
Published on


எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற சர்ச்சைக்குரிய கேள்வியால் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெரியார் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன் அடிப்படையில், மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான சர்ச்சைக்குரிய வினாக்கள் எழாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் 'எது தாழ்த்தப்பட்ட சாதி?' என்ற சர்ச்சைக்குரிய கேள்வியால் தமிழகம் முழுவதும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், வினாத்தாள் சர்ச்சைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தற்போது சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பட்டாளர் மற்றும் நிரந்திர துறை தலைவர்கள் யாரும் இல்லாததால் பொறுப்பு பதவிகளில் தற்போது நியமனம் நடைபெற்று வருகிறது.

இதனால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சமூக ஆர்வலர்களிடம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் மீதும் அதற்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தன. 

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழ முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com