கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பேருந்துகளை எரித்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறையினரும், பொதுமக்களும் படுகாயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பேருந்தை எரித்து பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 128 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களில் 15 பேர் சிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களில் 108 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறையை தூண்டுவது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், கூட்டு சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்காக நீதிமன்றத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.