ஆடிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் கால்நடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடைச் சந்தை இயங்கி வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,ச ண்டை சேவல், பந்தயப் புறா, பசுமாடுகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.
ஆடிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இச்சந்தையில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடைகள் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
மேச்சேரி, பெண்ணாகரம், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வந்த நிலையில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.