மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை திறந்து வைத்தார்.
இந்த சிற்பக்கலைத்தூணில் பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை
விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய “சிற்பக்கலைத் தூண்” உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.