/

சீன உளவுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தால் இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும் என்றும், இதுதொடா்பாக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
பாமக நிறுவனா் ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:57 am

DIN

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தால் இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும் என்றும், இதுதொடா்பாக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். 750 கிலோ மீட்டருக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பாா்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பல் எளிதில் உளவு பாா்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும்.

சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டுக்கு எதிரான செயலாகும்.

எனவே, இதுகுறித்து இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எத்தகைய கடினமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு மத்திய அரசு தயங்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.