மயிலாடுதுறை: திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ரோகிணி யானை உடல்நலக்குறைவால் இறந்துள்ளதால் யானை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாதா யானைகளை கொண்டு சென்று வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் மதுரையில் இருந்து மலாச்சி என்ற யானை எம்.ஆர்.பாளையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பிறகு ஒவ்வொரு யானையாக கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து ரோகிணி (26) என்ற பெண் யானை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த யானை ராஜபாளையத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வந்தது.
சரியான உரிமம் இல்லாத காரணத்தால், வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை பறிமுதல் செய்தனர். சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் யானைக்கு இருந்ததாக வனத்துறை சார்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரோகிணி யானை சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
சரியான பராமரிப்பு இல்லாமை, போதிய சிகிச்சை வழங்காமை ஆகிய காரணங்களால் தான் யானை இறந்துபோனதாக வேதனை தெரிவிக்கும் யானை ஆர்வலர்கள், இதன் மூலம் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள மற்ற யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளின் பராமரிப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.