துறைமுகத்தில் மீன் விற்பதில் பிரச்னை: நாகூரில் சாலையில் மீன்களைக் கொட்டி மீனவர்கள் போராட்டம்

நாகூரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வது தொடர்பாக மீனவர்களுக்குமிடையே எழுந்த பிரச்னையை அடுத்து நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியல்
நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மேலப்பட்டினச்சேரி மீனவர்கள்.
நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மேலப்பட்டினச்சேரி மீனவர்கள்.
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம்:  நாகை மாவட்டம், நாகூரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வது தொடர்பாக மீனவர்களுக்குமிடையே எழுந்த பிரச்னையை அடுத்து நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, மீன்பிடிப்புத் தொடங்கியுள்ள நிலையில், கடலுக்குச் சென்ற மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள், தாங்கள் பிடித்து வந்த மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

இதற்கு, கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மீன்களை விற்க வேண்டும் எனக்கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் புதன்கிழமை காலை நாகூர் - காரைக்கால் சாலையில், தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

சாலையில் மீன்களை கொட்டும் மீனவர்கள்.

நாகூர் துறைமுகத்தில் மீன்கள் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  இப்போராட்டத்தால் நாகூர்- காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

காவல் துணைக் கண்காணிப்பாளர்  சரவணன், நாகூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  

அப்போது,  போலீஸாருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென டீசலை தன் மீது  ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால், அங்கு  பரபரப்பு நிலவியது.

பின்னர், மேலப்பட்டினச்சேரி மீனவர்களை நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க அனுமதிப்பது குறித்து மீன்வளத் துறை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com